Tuesday, May 10, 2011

நட்சத்திர மண்டலம்

நட்சத்திர மண்டலம்

முதல் பாடத்தில் கிரகத்தை காட்டிலும் நட்சத்திரங்கள் முக்கியமானது என பார்த்தோம்.

ஒரு கண்ணாடியில் ஒளி விழுவதாக கொள்வோம். கண்ணாடியின் தன்மைக்கும், நிறத்திற்கு ஏற்ப அந்த ஒளி தன்னை மாற்றிக்கொள்ளும். கண்ணாடி சிவப்பு நிறமாக இருந்தால் ஒளியும் சிவப்பாகவும், கண்ணடி தடிமனாக இருந்தால் ஒளி அளவில் குறைவாகவும் இருக்கும் என்பது நமக்கு தெரியும்.

மேற்கண்ட உதாரணத்தில் கண்ணாடி என்பது கிரகத்தையும் , ஒளி என்பது நட்சத்திரத்தையும் குறிக்கும். ஒளி இல்லை என்றால் கண்ணாடியின் தன்மையை உணர முடியாது அது போல, கிரகமும் நட்சத்திரமும் இணைந்து செயல்பட்டுதான் உலகின் செயல்களுக்கு காரணமாக இருக்கிறது.


நட்சத்திரம் என நான் சொல்லுவது ஒரே ஒரு நட்சத்திரத்தை குறிப்பதில்லை. பிரபஞ்சத்தில் என்னிலா கோடி நட்சத்திரங்கள் இருக்கிறது. எத்தனையோ நட்சத்திரங்கள் இருந்தாலும் அவற்றின் தன்மைக்கு ஏற்ப சில தலைப்புகளில் பிரித்துவிடலாம்.

பிறப்பால் அனைவரும் ஒன்றாக இருந்தாலும் அரசும்,மக்களும் ஜாதீய அடிப்படையில் பிரிவு பெருகிறார்களே அது போல. பிரபஞ்ச நட்சத்திரங்கள் 27 வகையானது என பிரிவுபடுகிறது. கவனிக்க. 27 நட்சத்திரங்கள் அல்ல. 27 வகையான நட்சத்திர கூட்டங்கள்.


ராசிமண்டலம் 360 டிகிரி கொண்டது என்பது நாம் கண்டோம்.
இந்த 360டிகிரியில் 27 நட்சத்திரங்கள் எப்படி அமைகிறது என காண்போம்.

360 டிகிரியில் 27 பிரிவு என கொண்டால் (360 / 27= 13 பாகை 20 கலை ) 13.20 என வரும்.

உதாரணமாக ஒரு பெட்டியில் ஒரு டஜன் குளிர்பான பாட்டில்கள் வைக்கலாம் என்றால், உங்களிடம் நான்கு பெட்டியும் நாற்பது குளிர்பான பாட்டில்களும் கொடுத்தால் என்ன செய்வீர்கள்?

பள்ளி நாட்களில் கேட்கப்பட்ட கேள்வி போன்று இருக்கிறதா?

முதல் பெட்டியில் [1 முதல் 12]
இரண்டாம் பெட்டியில் [13 முதல் 24]
மூன்றாம் பெட்டியில் [25 முதல் 36]
நான்காம் பெட்டியில் [37 முதல் 40]

என பிரித்து வைப்போம் அல்லவா?


அதே போல ராசி எனும் பெட்டியில் நட்சத்திரம் எனும் குளிர்பான பாட்டில்களை அடுக்குவோம். ஒரு நட்சத்திரத்தின் அளவு 13.20. இதை வரிசையாக ராசிமண்டலத்தில் அடுக்கி வரிசைப்படுத்த வேண்டும்.

ஒரு ராசியானது 30 டிகிரி கொண்டது. எனவே இதில் 13.20 + 13.20 என இரண்டு நட்சத்திரங்கள் வைக்கலாம். அப்படி வைத்த பிறகு 26.40 டிகிரி போக ஒரு ராசியில் மீதம் 3.20 டிகிரி எஞ்சி நிற்கும்,அதில் ஒரு நட்சத்திரத்தின் ஒரு பகுதியை வைத்து மீதியை அடுத்த ராசிக்கு எடுத்து செல்லலாம். அடுத்த ராசியில் நட்சத்திரத்தின் 10டிகிரி வரும்.


இவ்வாறாக ராசிமண்டலம் முழுவதும் 27 நட்சத்திரங்களை வைக்க முடியும்.

நமது வீட்டின் ஜன்னல் வழியே வானத்தை பார்த்தால், வானம் சதுரமாக தெரியும். ஆனால் வானம் சதுரம் அல்ல. அது போல ராசி மண்டலம் மூலம் பார்க்கும் பொழுது நட்சத்திரம் 13.20 பாகை அளவே தெரிகிறது. அதனால் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் 13.20 அளவில் தான் இருக்கிறது என முடிவு செய்ய கூடாது.


ஒன்பது கிரகங்கள் மூன்று நட்சத்திரம் வீதம் 27 நட்சத்திரத்தை ஆட்சி செய்கிறது. 9X3 =27.

கீழ்கண்ட படத்தில் நட்சத்திரங்கள் எப்படி ராசிமண்டலத்தை அமைக்கிறது என காணலாம்.


நட்சத்திர பெயர்கள் நமக்கு தேவை இல்லை. அஸ்வினி முதல் ரேவதி வரை நட்சத்திரங்களை மனப்பாடம் செய்ய தேவை இல்லை. கீழ்கண்ட வரிசையை மனதில் வையுங்கள். நட்சத்திரத்தை ஆளும் கிரகமும் அது எடுத்துக்கொள்ளும் டிகிரியும் மட்டுமே முக்கியம்.

கேது------13.20
சுக்கிரன்----13.20
சூரியன்----3.20 ----10.00
சந்திரன்----13.20
செவ்வாய்---6.40---6.40
ராகு------13.20
குரு------10.00------3.20
சனி------13.20
புதன்-----13.20

கேது முதல் புதன் வரை உள்ள கிரகங்கள் மேஷம் முதல் கடகம், சிம்மம் முதல் விருச்சிகம், தனுசு முதல் மீனம் என மூன்று நிலைகளில் ஒரே அமைப்பில் தான் இருக்கிறது.

இதில் சூரியன், செவ்வாய், குரு என்னும் கிரகங்கள் மட்டுமே இரு பிரிவுகளாக பிரிந்து இரு ராசிகளில் வரும். மற்றவை முழுமையாக ஒரே ராசியில் இருக்கும்.

இன்றைய பாடம் உங்களுக்கு கணிதமாக இருப்பதாக தோன்றலாம், உண்மையில் இது லாஜிக்கலான விஷயமே அன்றி கணக்கு சார்ந்த விஷயம் அன்று. நட்சத்திர மண்டலம் எனும் இந்த விஷயம் மிகவும் முக்கியனானது. இதை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் ஜோதிடத்தை கற்றும் பயனில்லை.

நட்சத்திர மண்டலம் எனும் பாடம் இன்றுடன் முடியவில்லை. அடுத்த பாடத்திலும் தொரும்.
ராசி நிலையில் மாதங்கள்


பன்னிரு ராசிகளும் கால நிலையையும் மாதங்களையும் குறிக்கிறது. ராசி மண்டலம் 360 பாகை கொண்டது என நாம் படித்தோம். சூரியன் தினமும் ஒரு பாகை வீதம் 360 டிகிரியை 365.25 நாட்களில் சுற்றிவருகிறார்.

"சூரியன் சுற்றிவருகிறார்” என படித்தவுடன் உங்கள் பகுத்தறிவு பாசறையை திறந்துவிடாதீர்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் பஸ் முன்னோக்கி செல்லும் பொழுது அருகில் நிலையாக இருக்கும் பஸ் பின்னோக்கி செல்லுவது போல தோற்றம் கொடுக்கும். அது போல சூரியன் நிலையாக இருந்தாலும், பூமி சுற்றிவருவதால் சார்பியல் கோட்பாட்டின் படி சூரியன் சுற்றிவருவதாக சொல்லுவோம்.

ஐந்தேகால் நாட்கள் அதிகம் வருவதற்கு காரணம் பூமியின் சுற்றுபாதை நீள்வட்டமாக இருப்பதால் அகண்ட வளைவுகளில் அதிகமாக காலத்தை சூரியன் எடுத்துக்கொள்கிறார். சில ஓட்டப்பந்தையத்தில் போட்டியாளர்களை கோணலாக நிற்க வைத்திருப்பார்களே பார்த்திருக்கிறீர்களா? காரணம் ஓடுகளம் நீள்வட்டமாக இருந்தால் ஓடுகளத்தின் வெளிச்சுற்றில் இருப்பவர் அதிக கால அளவு ஓடவேண்டி இருக்கும்.


சூரியன் ஒரு டிகிரி செல்ல ஒரு நாள் எடுத்துகொள்வதால், ஒரு ராசியை முப்பது நாட்களில் கடந்துவிடுவார். ஆக ஒரு வருடம் என்பது சூரியன் பன்னிரு ராசியை 365.25 நாட்களில் சுற்றிவருவதை பொருத்து அமைகிறது.

ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷம் முதல் நாட்களும் மாதங்களும் துவங்கும். மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகள் சித்திரை முதல் மீனம் வரை உள்ள மாதங்களை குறிக்கும். சூரியன் மேஷ ராசியில் முதல் பாகையில் சென்றால் அன்று சித்திரை ஒன்றாம் தேதியாகும். மேஷ ராசியில் 15 டிகிரி சென்றால் அன்று சித்திரை 15ஆம் தேதி. எளிமையாக சொல்ல வேண்டுமானால் சூரியன் இருக்கும் பாகைதான் நமக்கு தேதியாக இருக்கும்.

ஒருவர் ஆகஸ்டு 4ஆம் தேதி பிறக்கிறார் என்றால், ஜூலை 15 முதல் ஆகஸ்டு 15 வரை சூரியன் கடக ராசியில் இருக்கும். அதாவது அந்த நபர் ஆடி மாதத்தில் பிறந்திருக்கிறார் என கொள்ளவேண்டும். ஜோதிட ரீதியான மாதம் தெரியவில்லை என்றால் ஆங்கில மாதத்தின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.


விஞ்ஞானத்தின் உச்ச நிலையில் இருக்கும் சமூகம் மட்டுமே இப்படி இருக்கும் நாள்காட்டியை கொடுக்க முடியும். 550 வருடம் முன்பு வரை ஆங்கிலேயர்களின் காலண்டரில் பத்து மாதங்கள் தான். காரணம் சராசரி மனிதனுக்கு எண்ணிக்கை அவனது பத்து விரலுக்கு மேல் விரிவதில்லை. ஜூலியர் சீசர் காலத்தில் நமது கலாச்சார தாக்கம் காரணமாக ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் இடையே இணைக்கப்பட்டது. அதற்கு முன்புவரை செப்,அக்ட்,நவா,டிச என துவங்கும் எண்ணிக்கைகள் 7,8,9,10 எனும் வரிசையிலேயே கிரேக்கர்கள் பயன்படுத்தினர்.

திடிரென இரு மாதங்கள் இணைத்தும் 365.25 நாட்கள் வராத காரணத்தால் ஒரு மாதத்திற்கு 30 அடுத்த மாதத்திற்கு 31 என கொடுக்க ஆரம்பித்தனர். குரங்கு அப்பம் தின்ற கதையாக ஆங்கில நாள்காட்டி அலங்கோலமாக இருக்கிறது.

சித்திரை முதல் பங்குனி வரை கூறப்படும் மாதங்கள் தமிழ் மாதங்கள் அல்ல. மாதத்தின் பெயர்களான சித்திரை, வைகாசி என்பதும் தமிழ் பெயர்கள் அல்ல.

தமிழனுக்கு சொந்தமான நாள்காட்டியை உருவாக்க இங்கு நிறைய குடிதாங்கிகள் இருக்கிறார்கள். அதனால் இந்த மாதங்களை "ஜோதிட மாதங்கள்" என கொள்வோம். விஞ்ஞான ரீதியான நாள்காட்டியை பயன்படுத்தமாட்டோம் என சொல்லும் தமிழனை என்ன என்று சொல்லுவது? சூரியன் தமிழனுக்கு மட்டும் சொந்தமா என்ன? நமக்கு எதுக்கு அரசியல், வாருங்கள் பாடத்தை கவனிப்போம்.

ராசி நிலையில் நேரங்கள் :

சூரியன் ஒரு நாளுக்கு ஒரு பாகை செல்லுவதாக சொன்னேன். ஒரு நாள் என்பது ஒரு மாதம் மற்றும் வருடம் உருவாக காரணமாக இருக்கிறது.

நாள் எப்படி காரணியாக இருக்கிறதோ அது போல நேரம் ஒரு நாள் உருவாக காரணமாகிறது. 24 மணி நேரத்தில் பூமி தன்னை தானே சுற்றுவதை ஒரு நாள் என்கிறோம். எனவே ஒரு ராசிக்கு இரண்டு மணி நேரம் வீதம் பன்னிரெண்டு ராசிகளில் நேரம் ஒரு நாளில் பயணிக்கும்.
( 24 மணி நேரம் / 12 ராசிகள் = 2 மணி
நேரம்).

தினமும் நேரம் சூரியன் இருக்கும் ராசியில் தான் துவங்கும். உதாரணமாக சித்திரை மாதம் ( ஏப்ரல் 14 முதல் மே 15) காலை 5.30 மணி மேஷ ராசியில் துவங்கும். 5.30 என்பது இந்திய தேசிய மணி. ( IST)

காலை 5.30 துவங்கி 7.30 வரை இரண்டு மணி நேரம் , நேரமானது மேஷ ராசியில் பயணிக்கும். 7.30 முதல் 9.30 வரை ரிஷபம் என இரண்டு இரண்டு மணி நேரமாக பன்னிரு ராசிகளை 24 மணி நேரத்தில் நேரமானது கடக்கும்.

மேலே நேரம் என நான் சொன்னதை வடமொழியில் எளிமையாக லக்னம் என சொன்னார்கள். லக்னம் என்பது ராசிநிலையில் நேரம் காட்டும் குறியீடு என அறிக. மிகவும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

மேலே X எனும் குறியீடு லக்னத்தை குறிக்கும்.

முக்கியமாக மனதில் கொள்ளவேண்டியது , சூரியன் இருக்கும் ராசியிலிருந்து தான் லக்னம் ஆரம்பிக்கும். சித்திரை என்பதால் மேஷ ராசியில், ஐப்பசி என்றால் துலாராசியில் என சூரியன் இருக்கும் ராசியில் தான் காலை 5.30க்கு லக்னம் துவங்கும்.

லக்ன ஓட்டத்தையும் சூரியனின் மாற்றத்தையும் எளிமையாக நினைவில் வைக்க கடிகார முள் சிறந்த உதாரணம். லக்னம் எனும் பெரிய முள் ராசி மண்டலத்தை 30 முறை சுற்றினால், சூரியன் எனும் சின்ன முள் ஒரு ராசி நகரும். எந்த வருடமானாலும் லக்னம் மற்றும் சூரியனின் இந்த மாற்றம் நிலையானது.

ராசிநிலையில் உடல் உறுப்புக்கள்

ராசிகளின் தன்மைகளை சென்ற வகுப்பில் பார்த்தோம். ஒவ்வொரு ராசியும் மனித உடலின் சில பாகங்களை குறிக்கும்.மேஷம் முதல் மீனம் வரை பன்னிரு ராசிகள் குறிக்கும் உடல் பகுதிகள் எளிதில் புரிய படமாக கீழே கொடுத்துள்ளேன்.


ராசிகள் குறிக்கும் உடல் உறுப்புகளை மனதில் வைத்துக்கொள்ள ஓர் எளிய வழி உண்டு. ஒரு மனிதனை தலை முதல் பாதம் வரை மேலிருந்து கீழாக பன்னிரண்டு பிரிவாக பிரித்தால் எளிமையாக கூறலாம்.

ராசிகள் மட்டுமல்லாமல் , கிரகக்களும் மனித உடலின் உறுப்புக்களையும் வியாதியின் தன்மையையும் குறிக்கும்.

சூரியன் : ஆண்களுக்கு வலது கண், பெண்களுக்கு இடது கண், இருதயம், சுத்தமான ரத்தம்
சந்திரன் : பெண்களுக்கு வலது கண், ஆண்களுக்கு இடது கண், நுரயீரல், உடலில் உள்ள திரவ பொருட்கள்
செவ்வாய்: அசுத்தமான ரத்தம், கழிவு பொருட்கள், மல துவாரம், உடல் வெப்பம், மூளை மற்றும் இருதயத்தின் இயங்கும் திறன்
புதன் : நரம்பு மண்டலம், விலா எழும்பு, இடுப்பு, உடலின் அமைப்பு, முதுகெலும்பு
குரு : ஜீரண உறுப்புகள், புதிய வளர்ச்சி, சதைப் பற்றுள்ள பகுதிகள், மார்பகம், தொடைப் பகுதி, பிட்டம்
சுக்கிரன்: சிறுநீரகம், கருப்பை, பிறப்புறுப்புகள், உடலில் உள்ள சுரபிகள்
சனி : தோல், பற்கள், எலும்பு, எலும்பு மஜ்ஜை, கேசம்,நகம்
ராகு : அதிகமான வலி, அலர்ஜி
கேது : வளர்ச்சியை தடுத்தல், எதிர்ப்பு சக்தியை குறைத்தல்


மனித உடலில் ஏற்படும் நோய் மற்றும் உறுப்பு இழத்தல் (அங்கஹீனம்) ஆகியவற்றை அறிய மேற்கண்ட தன்மைகள் பயன்படும். மேலும் ஒருவரி உடலில் இருக்கும் மச்சம் மற்றும் தழும்புகள் எந்த பகுதியில் இருக்கிறது எனவும் காணலாம். கிரகங்களில் சூரியன் முதல் சனி வரை உடல் உறுப்பை குறிக்கிறது, ஆனால் ராகு கேதுக்கள் உறுப்புகளை குறிக்காது. காரணம் ராகு-கேதுக்கள் உருவமில்லா கிரகம் என்பதால், அவை குறிக்கும் விஷயமும் உருவம் இல்லாமல் இருக்கிறது. வலியை கண்களால் பார்க்க முடியுமா?

ராசி தன்மையுடன் இணைத்து கிரகத்தன்மையை பயன்படுத்தும் பொழுது பலன்கள் மேலும் துல்லியமடையும்.உதாரணமாக நோய் கொடுக்கும் கிரகம் ஒருவருக்கு ரிஷபராசியில் இருக்கிறதாக வைத்துக்கொள்வோம். அவருக்கு கண், காது, மூக்கு , வாய் மற்றும் தொண்டை பகுதியில் நோய்வரும் என பொதுவாகத்தான் சொல்ல முடியும். ஆனால் கிரகத்தன்மையை இணைத்தால் மேலும் துல்லியமாக்கலாம்.

நோய் கொடுக்கும் கிரகம் சூரியனாக இருந்து ரிஷப ராசியில் இருந்தால் ஜாதகருக்கு கண் சம்பந்தபட்ட நோய் மட்டுமே வரும் என சொல்லலாம். காரணம் ரிஷப ராசிக்கும் சூரியனுக்கும் பொதுவான தன்மை கண்கள். மேலும் நீங்கள் நன்கு சிந்திப்பவராக இருந்தால் பலனை ஆழமாக சொல்ல முற்படுவீர்கள்.

கண்களில் நோய்வரும் என்பது மட்டுமல்லாமல் ஜாதகர் ஆணாக இருந்தால் வலது கண்ணிலும், பெண்ணாக இருந்தால் இடது கண்ணிலும் நோய்வரும் என சொல்லி உங்கள் பலனை துல்லியமாக்கலாம்.

மருத்துவ ஜோதிடம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் ஓர் தனிப்பிரிவு. நடைமுறை உலகிற்கு நன்கு பயன்படக்கூடிய துறையும் கூட. உயர்நிலை மருத்துவ ஜோதிடம் கற்றால் மருத்துவ ஜோதிடர் ஆகி நோய்வரும் தன்மை, எது போன்ற மருத்துவ முறையில் குணமாகும், எவ்வளவு காலம் அவர் நோயில் துன்பப்படுவார் போன்ற விஷயங்காளை சொல்ல முடியும். அனைத்துக்கும் இதுதான் அடிப்படை, எனவே இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


ராசிகள் மற்றும் அதன் பெயர்களை பற்றி தெரிந்து கொண்டோம். இனி ராசிகளின் தன்மைகளை பற்றி பார்க்கலாம்.

ஒவ்வொரு ராசியும் தனக்கென ஓர் தன்மையை கொண்டுள்ளது. இதை பயன்படுத்தினால் பலன் சொல்லும் நிலையில் மேம்மை கிடைக்கும்.


ராசி நிலையில் சர - ஸ்திர - உபய ராசிகள்




சரம் என்பது நகரும் தன்மையை குறிக்கும். ஸ்திரம் என்பது நிலையாக இருக்கும் தன்மையை குறிக்கும். உபயம் என்பது இரு தன்மைகளையும் குறிக்கும். மேஷம் முதல் துவங்கி ஒவ்வொரு ராசியாக இந்த மூன்று தன்மைகள் நான்கு முறை வரும். [3X4 = 12].

மேற்கண்ட ராசி தன்மையை பலவிதமான பலன் சொல்லுவதற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக ஒருவரின் தொழில் பற்றி ஆராயும் பொழுது , ஜாதகரின் தொழிலை கொடுக்கும் கிரகம் சர ராசியில் இருந்தால், மார்கெட்டிங் சார்ந்த தொழில் செய்வார் என சொல்லலாம். காரணம் அவரின் தொழில் தன்மை ஓர் இடத்தில் இருந்து செயல்படும் நிலையில் இருக்காது. ஸ்திர ராசி சம்பந்தம் இருந்தால் ஓர் இடத்தில் அமர்ந்து வேலை செய்பவராக இருப்பார். அரசு அதிகாரிகள் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

உதாரணத்தை பார்த்தவுடன் உங்கள் ஜாதகத்தை எடுத்து ஆராய வேண்டாம். மேஷ ராசியில் பிறந்தவர்கள் எல்லாம் சர தன்மையில் வேலை செய்வார்கள் என முடிவுக்கு போக வேண்டாம். மேலே உதாரணத்தில் “தொழிலை கொடுக்கும் கிரகம்” என கொடுத்திருக்கிறேன் அல்லவா? ஒருவர் ஜாதகத்தில் தொழிலை கொடுக்கும் கிரகம் எது என தேர்ந்தெடுப்பது பின்னால் உங்களுக்கு கூறுகிறேன். தற்சமயம் ராசியின் தன்மையை மட்டும் கற்றுக்கொள்ளலாம்.

சர ஸ்திர உபய ராசிகளின் தன்மைகளை ஆயுள் அறிய, காணாமல் போனவரை கண்றிய என பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்.

ராசி நிலையில் பஞ்சபூதங்கள்





பஞ்சபூதங்களான நெருப்பு,பூமி,காற்று மற்றும் நீர் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பஞ்சபூதம் என நான்கு தன்மைகள் மட்டுமே கூறிகிறேன். ஆகாயம் எனும் தன்மை இதில் இடம் பெறாது. ஏன் தெரியுமா? ராசி மண்டலம் முழுவதும் ஆகாயத்தில் தானே இருக்கிறது. பஞ்ச பூதம் ஒவ்வொன்றிலும் மற்ற நான்கு பூதம் அடக்கம் எனும் வேதாந்தத்தை இங்கே காணமுடிகிறது. நான்கு விதமான தன்மைகள் ராசியில் மூன்று முறை வருவதால் பன்னிரு ராசிகளுக்கும் சமமாகிறது.

பஞ்சபூத தன்மையையும் தொழில், வானிலை அறிதல் போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்.


ராசிநிலையில் இரட்டைபடை, பலகால், நான்குகால் ராசிகள்





மேற்கண்ட ராசிகளின் தன்மை மூலம் ஒருவரின் ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிலையில் அமையும் விஷயத்தை சொல்லலாம். உதாரணமாக இரு தொழில் அமைவது.. ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கள் இருப்பது என பல உதாரணம் கூறலாம்.

ஒருவர் எப்படி பட்ட வாகனம் வாங்குவார் என்பதை இதன்மூலம் கண்டறியலாம். வாகனத்தை குறிக்கும் கிரகம் இரட்டை ராசியில் இருந்தால் இரு சக்கர
வாகனம் என்றும், நான்கு கால் ராசியில் இருந்தால் நான்கு சக்கர வாகனம் என்றும் சொல்லலாம். லாரி, பஸ் போன்றவை பலகால் ராசி தன்மையில் அமையும்.


ராசிநிலையில் மலட்டு ராசிகள்





மேஷம், மிதுனம்,சிம்மம், கன்னி ராசிகள் மலட்டு ராசிகள் என வழங்கப்படுகிறது. இந்த ராசிகள் குழந்தை பிறப்பை தடை செய்யும். உடனே இந்த நான்கு ராசிகாரர்களுக்கு குழந்தை பிறக்காது என வதந்தியை கிளப்பி விட வேண்டாம். ஒருவரின் ஜாதகத்தில் குழந்தையை குறிக்கும் கிரகம் மலட்டுராசியில் இருக்க வேண்டும். அந்த கிரகத்தை எப்படி தேர்ந்தெடுப்பது என பின்வரும் வகுப்பில் பார்ப்போம்.

மலட்டு ராசிகளின் தொடர்பு எல்லோருக்கும் இருக்கும். ஒருவருக்கு இரண்டு குழந்தை இருக்கிறது என்றால், மூன்றாம் குழந்தையை கொடுக்கும் கிரகம் மலட்டு ராசி தொடர்பு கொண்டு இரண்டுடன் குழந்தை பிறப்பை தடைசெய்யும். முதல் குழந்தையை கொடுக்கும் கிரகமே இவ்வாறு இருந்தால் குழந்தை இல்லாமல் போகும்.

ராசி நிலையில் ஆண் பெண் ராசிகள்





ஆண் ராசிகள் பெண் ராசிகள் என ஒன்று விட்டு ஒன்று ராசியாக பன்னிரு ராசியில் அமைகிறது. கொடுக்கப்பட்ட ஜாதகம் ஆண் ஜாதகமா பெண் ஜாதகமா என பார்க்கவும். பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என கூறவும் இந்த தன்மை பயன்படுகிறது. ஆண்- பெண் தன்மையை குறித்தாலும் உண்மையில் இது எதிர்மறை தன்மையை குறிக்கும் ராசிகள். ஆண் பெண் மட்டுமல்ல இரவு-பகல், மேல்-கீழ் என எதிர்மறை தன்மைகள் அனைத்தையும் இது குறிக்கும்.



ராசிகளின் தன்மைகளை எப்படி மனதில் வைத்துக்கொள்ளுவது?

ராசிகளின் மேற்கண்ட தன்மைகளை எப்படி மனதில் வைத்து கொள்வது என புரியாமல், ஆறாம் வகுப்பு மணவன் போல மனப்பாடம் செய்ய துவங்க வேண்டாம். அதற்காகத் தான் நம் முன்னோர்கள் ராசிகளுக்கு ஒரு வடிவம் கொடுத்திருக்கிறார்கள். இத்தனை தன்மைகளை ராசிகளின் வடிவத்துடன் ஒப்பிட்டு பாருங்கள் உங்களால் எளிமையாக மனதில் வைக்க முடியும். உதாரணமாக சில...

மேஷ ராசி ஆடு எனும் அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது. காரணம் மேஷ ராசி நான்குகால் ராசி. ஆண் ஆடு என்பதால் ஆண் ராசி, ஆண்களால் குழந்தையை பிரசவிக்க முடியாது என்பதால் மலட்டு தன்மை.

மிதுன ராசி இரு குழந்தைகள் கையில் நாதசுவரத்துடன் இருப்பார்கள். காரணம் மிதுனம் இரட்டை ராசி, நாதஸ்வரம் வைக்க காரணம் அது ஓர் காற்று ராசி. குழந்தைகள் குழந்தையை உருவாக்க முடியாது என்பதால் மலட்டு ராசி.

நவீன அறிவாளிகள் பயன்படுத்தும் மெம்மரி மாப்பிங் (memory mapping) எனும் முறையை நம் முன்னோர்கள் முன்பே பயன்படுத்தி இருக்கிறார்கள். ராசிகளின் வடிவம் அது போல வானத்தில் தெரியாது. ராசிகளை மனதில் வைக்கவே அவ்வாறு வடிவம் கொடுக்கபப்ட்டுள்ளது. ராசிகளின் வடிவத்தை கூர்ந்து கவனித்து ராசிகள் குறிக்கும் தன்மையை புரிந்து கொள்ளுங்கள்.

ஏன் மேஷம் என்ற ராசியை செவ்வாய் குறிக்க வேண்டும்? மகர ராசி - கும்ப ராசியை ஏன் சனி குறிக்க வேண்டும் ?செவ்வாய் கன்னி ராசியை குறிக்க கூடாதா? என கேட்டால் எப்படி விளக்கம் சொல்லுவீர்கள்?

சனி >> குரு >> செவ்வாய் >> பூமி (சந்திரன்) >> சுக்கிரன் >> புதன் >> சூரியன் |
மேற்கண்ட நிலையில் சூரிய மண்டலத்தில் கிரகங்கள் அமைந்திருங்கின்றன. ராசி கட்டத்தை இதனுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

கிரகங்களான சனி,குரு,செவ்வாய்,சுக்கிரன், புதன் ஆகியவை இரு வீடுகளை ஆட்சி செய்கிறது. காரணம் கிரகத்திற்கு நட்சத்திர ஆற்றலை உள்ளே பெற்று எதிரொளிக்கும் தன்மை இருக்கிறது. சென்ற வகுப்பில் சந்திரன் ஓர் உப கிரகம், சூரியன் ஓர் நட்சத்திரம் என படித்தோம் அல்லவா?

இவைகளுக்கு எதிரொளிக்கவோ உள்வாங்கவோ ஒரு தன்மை மட்டுமே உண்டு. அதனால் ஓர் ராசி.

ராகு கேது கிரகமோ, நட்சத்திரமோ, உபகிரகமோ கிடையாது அதனால் அவைகளுக்கு வீடு இல்லை.

ஜோதிடம் என்பது கிரகங்களின் ஆற்றலும் நட்சத்திர ஆற்றலும் பூமிக்கு வரும் அமைப்பை ஆராய்வதால், ராசி மண்டலத்தில் பூமிக்கு இடமில்லை. ராசி கட்டத்தின் நடுவில் பூமி இருப்பதாக கற்பனை செய்யுங்கள். எளிமையாக ராசிகளை ஏன் அந்த கிரகம் ஆட்சி செய்கிறது என விளங்கும்.

நம் முன்னோர்கள் வானவியலில் எவ்வாறு முன்னேற்றம் கண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் பாருங்கள்.


சூரிய மண்டலம் மற்றும் அதில் இருக்கும் கிரகங்கள் பற்றி தெரிந்து கொண்டோம். சூரியனும் , பிற கிரகங்களும் கோள் வடிவமாக இருக்கிறது அல்லவா? சூரியனை சுற்றி வரும் கிரகங்கள் நீள் வட்ட பாதையில் சுழலுகிறது அல்லவா?

ஆக வான் மண்டலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் அதன் செயல்களும் வட்டத்தின் அடிப்படையாகவே இருக்கிறது.இயற்கையில் உருவாகும் அனைத்து விஷயத்திலும் வட்டம் அடிப்படை வடிவமாகவே இருக்கும். வட்டம் வளரும்பொழுது கோளம், உருளை என முப்பரிமாணமாக மாற்றமடையும்.

கரு உருவாகும் பொழுது சூல் வட்டவடிவமாக இருக்கும். உலகின் முதல் விஞ்ஞான கண்டுபிடிப்பான சக்கரம் வட்டவடிவமானது என வட்டத்தின் சிறப்பை கூறிக்கொண்டே செல்லலாம்.

வட்டம் ஆரம்பமும் முடிவும் அற்றது. அதனாலேயே வட்டத்தின் அடிப்படையில் இயங்கும் பிரபஞ்சமும் தோற்றமும் முடிவும் அற்றதாக இருக்கிறது.

இத்தகைய வட்டத்தை தெரிந்து கொள்வது அவசியம்.

கணிதத்தில் வட்டத்தின் சுற்றலவு 360 டிகிரி என்கிறார்கள்.

வட்டத்தை இரண்டாக பிரித்தால்....இரண்டு... 180 டிகிரியாக மாறும்.

வட்டத்தை நான்காக பிரித்தால் ... நான்கு 90 டிகிரியாக மாறும்.

இதுவரை நாம் பிரித்தது செங்கோணமாக இருக்கும் வடிவங்கள். 90 டிகிரியை இரண்டாக பிரித்தால் 45 டிகிரி கிடைக்கும். ஆனால் அது செங்கோணம் அல்ல..

90 டிகிரியை மூன்று பிரிவுகளாக பிரித்தால் 30 டிகிரி என பன்னிரெண்டு பிரிவுகள் கிடைக்கும்.

30 டிகிரிக்கு கீழே பிரிக்க வேண்டும் என்றால் 1 டிகிரி என்பதே சரியான கோணமாகி 360 பிரிவுகள் கிடைக்கும்.





பன்னிரெண்டு பிரிவான 30 டிகிரியை ஓர் அடிப்படை அலகாக (Units) கொண்டு ஜோதிடத்தில் ஆய்வு செய்கிறார்கள். இந்த பன்னிரெண்டு பிரிவகளே ராசிகள் என அழைக்கப்படுகிறது.

பன்னிரெண்டு பிரிவுகள் எவ்வாறு அமைந்து இருக்கிறது என தெரிந்து கொள்ளவேண்டுமானால் ஓர் ஆரஞ்சு பழத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் சுளைகள் பன்னிரெண்டு இருப்பதாக கொண்டால், பூமியின் சுற்று பகுதியில் ராசிகள் அமைத்தவிதம் எப்படி இருக்கும் என யூகிக்க முடியும்.

ஜோதிட ஆய்வு செய்யுபொழுது கருத்துக்களை எழுத சிரமமாக இருக்கும் என்பதற்காகவே வட்டதின் மூலை பகுதிகளை சீராக்கி சதுர வடிவில் அமைத்திருக்கிறோம். மற்றபடி ராசி மண்டலம் என்பது வட்டவடிவம் தான், நமது செளகரியத்திற்காக அனைத்து பிரிவுகளும் சதுரத்தில் அமைந்திருக்கிறது.
மேலும் வட்டத்தின் சித்தாந்தம் குலையாமல் 30 டிகிரியாகவே அமைந்துள்ளது.

ராசி மண்டலத்தின் ஒவ்வொரு பகுதியும் அதற்கென ஓர் பெயரும் கிரக ஆதிக்கமும் கொண்டு அமைக்கபட்டுள்ளது. அதன் படம் கீழே..
















ஜோதிடத்தை பொருத்தவரை சூரியன் ஒரு கிரகம் அல்லவா? சூரியன் ஒளி மனிதனுக்கு கிடைக்கவில்லை என்றால் அதிக தோல்வியாதியால் துன்பபடுவான்.

ஜோதிடம் எனும் சாஸ்திரம் வேத சாஸ்திரத்தின் ஓர் அங்கம். ஜோதிடத்தை கண்டு பிடித்தது இன்னார் என சுட்டிக்காட்ட முடியாது. சாஸ்திரம் என்பது முற்றிலும் கண்டறியபட்ட மெஞ்ஞானம் என பொருள் கொள்ளலாம். ஜோதிடம் என்பதும் சாஸ்திரம் எனும் தலைப்பிற்கு கீழ் வரும் ஓர் மெஞ்ஞானமாகும்.

தனிஒரு மனிதனால் கண்டுபிடிக்கபட்ட எந்த ஒரு சித்தாந்தமும் விஞ்ஞானம் என்றே அழைக்கப்படும். சாஸ்த்திரங்கள் எல்லாம் யார் கண்டுபிடித்தார் என கூறப்படாமல் இருக்கும், காரணம் அவை இறையருளால் மனித இனத்திற்கு தரப்பட்டது என்பதே உண்மை.

வராக மிஹிரர், பராசரர் மற்றும் ஜெயமினி என்ற முனிவர்கள் கண்டுபிடிக்கவில்லையா என கேட்கலாம். அவர்கள் தெய்வீகம் எனும் நதி வழிந்தோடும் பகுதியின் கரையாக இருந்தார்கள். அதாவது ஜோதிட சாஸ்திரம் உலகுக்கு கொடுக்க இறைவனால் தேர்ந்தெடுக்கபட்ட கருவிகள். சில முட்டாள்கள் ஜோதிடத்தின் வரலாறை சொல்லும் பொழுது “ஆட்டு இடையர்கள் வானத்தை ஆராய நிறைய நேரம் கிடைத்தது அதனால் வானசாஸ்திரத்தை கண்டறிந்து முதலில் அவர்களுக்கு பிடித்த ஆட்டை ராசியின் வடிவமாக கொடுத்தார்கள்” என்கிறார்கள். சிறிது சிந்தித்து பாருங்கள் ஆட்டு இடையர்கள் கண்டறிந்தார்கள் என்றால் இன்றைய ஆட்டு இடையர்கள் ஏன் ஜோதிடர்களாக இல்லாமல் , புதிய கண்டுபிடிப்பு செய்யாமல் வெறும் ஆட்டுக்காரர்களாகவே இருக்கிறார்கள்? விட்டால் ஏசு நாதர் ஆடு மேய்த்தார் அவர்தான் முதல் வானியல் நிபுணர் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.

ஜோதிடத்தின் வரலாற்றை பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாம் ஓய்வாக இருக்கும் சமயம் அதை பற்றி பேசுவோம். இப்பொழுது ஜோதிடம் பற்றி அடிப்படை விஷயங்களை பகிர்ந்து கொள்வோம்.


கிரகங்களுக்கு உண்மையில் வேலை செய்யுமா?

உங்கள் நண்பர் ஒருவர் சாதாரண வாழ்க்கை வாழ்கிறார் என கொள்வோம். உடனடியாக அவரின் வாழ்க்கையை மேம்படுத்தி கோடீஸ்வரர் ஆக்க முடியுமா?
.
.
.
.
முடியாது...
அவரின் சாதாரண நிலையிலிருந்து கீழ் இறக்கி ஒன்றுக்கும் ஆகாதவராக பிச்சை எடுப்பவறாக மாற்ற முடியுமா?
.
.
.
.
.
அதுவும் முடியாது.

உணர்வு நிலையில் தொடர்பு கொண்ட, கண்களால் பார்த்து உணரக்கூடிய உங்கள் நண்பரை இது போல மாற்றம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் பொழுது....

கண்களால் பார்க்க முடியாத.. உணர்வு நிலைக்கு அப்பாற்பட்ட கிரகம் இதை எல்லாம் செய்கிறது என்கிறார்களே அது எப்படி?

சுக்கிரன் வந்தது கோடீஸ்வரன் ஆனார், சனி வந்தது காணாமல் போனார் என்கிறார்களே?

கிரகத்திற்கு உண்மையில் சுயமான சக்தி கிடையாது.


புரிகிறது ... வேறு ஏதோ இணைய தளத்திற்கு வந்துவிட்டோமா என முழிக்கிறீர்கள்.

கிரக சக்தி கண்களுக்கு தெரிவதில்லை. அதனால் ஜோதிடம் இல்லை, கிரக சக்தி இல்லை என சொல்ல முடியாது.

அலைபேசியை உதாரணமாக கொள்வோம். அலைபேசியில் அதன் அலைகள் கண்களுக்கு தெரிவதில்லை. நம்மை ஒருவர் அலைபேசியில் அழைத்தால் அது எந்த திக்கிலிருந்து வருகிறது என நம் கண்களில் தெரிவதில்லை. அதற்காக அலைபேசி என்பது பொய் என நாம் எண்ணுவதில்லை. அதுபோல தான் கிரக சக்தியும்.

கிரகத்திற்கு சக்தி கிடையாது என கூறினேன். ஆனால் சக்தியே கிடையாது என சொல்லவில்லை. கிரகம் தனித்து இயங்காது. ஆனால் நட்சத்திரம் எனும் மாபெரும் சக்தி அதன் பின்புலத்தில் வேலை செய்தால் தான் இயங்க முடியும்.





அலைபேசி எப்படி வேலை செய்கிறது என்பதை ஆராய்தால் நட்சத்திரம் - கிரகம் - மனிதன் எப்படி இயங்குகிது என புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.


அலைபேசியில் ஒருவர் மற்றொருவருக்கு தொடர்பு கொள்கிறார் என்றால் முதலில் அந்த அலைகள் அருகில் இருக்கும் கோபுரத்திற்கு (TOWER) செல்லும் அங்கிருந்து அலைபேசி மாற்றிக்கு (Tele Exchange) செல்லும் பின்பு இதே செயல் நடந்து மற்ற அலைபேசிக்கு சென்றடையும்.

அது போலதான் நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல் கிரகத்தினால் பிரதிபலிக்கப்பட்டு நமது தாய் கிரகமான பூமிக்கும் எதிரொளிக்கப்படுகிறது.

மனிதனும் மற்ற ஜீவராசிகளும் ஏன்.. அனைத்தும் இதனால் இயங்குகிறது.




எனவே நட்சத்திரம் இல்லாமல் கிரகங்களும், கிரகங்கள் இல்லாமல் நட்சத்திரமும் பூமிக்கு ஆற்றலை வழங்க முடியாது. இரண்டு விஷயங்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

இங்கு வானவியல் பற்றி பேசவேண்டும். வானவியல் (Astronamy) என்பது ஓர் விஞ்ஞான சித்தாந்தம். கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் மற்றும் விண்வெளி பற்றி ஆராயும் சித்தாந்தம்.

வானவியல் ஜோதிடத்தின் அடிப்படை என சொன்னாலும், முழுமையான வானவியல் நமக்கு பயன்படாது. கிரகங்களின் சுற்றுபாதை, சூரிய மண்டலத்தின் அமைப்பு இதுவெல்லாம் வானவியல் மூலம் நமக்கு கிடைக்குமே தவிர ஜோதிடத்தை பற்றி நாம் இங்கு பேசிய கிரக ஆற்றல் எனும் கருத்து வானவியலில் இல்லை.

சூரிய மண்டலத்தில் உள்ள வானவியல் கிரகங்கள் பார்ப்போம்.

1) சூரியன் 2) புதன் 3) சுக்கிரன் 4) பூமி 5) செவ்வாய் 6) குரு 7) சனி 8) யூரைனெஸ் 9 ) நெப்டியுன் 10) ப்ளூட்டோ

இதில் சூரியன் என்பது ஓர் நட்சத்திரம், மற்றவை அனைத்தும் கிரகம். இதில் ப்ளூட்டோ என்பது தற்சமயம் கிரகம் அல்ல என அறிவிக்கப்பட்டுவிட்டது.


ஜோதிட ரீதியான கிரகங்களை பார்ப்போம்.

1) சூரியன் 2) சந்திரன் 3) செவ்வாய் 4) புதன் 5) குரு 6) சுக்கிரன் 7)சனி 8) ராகு 9) கேது.

வானவியல் கிரகத்திலும் , ஜோதிட ரீதியான கிரகத்திலும் எத்தனை வித்தியாசம் பார்த்தீர்களா?
ஜோதிட ரீதியான கிரகங்களில் பூமி என்பது இல்லை, ராகு கேது என்பது புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.




இதற்கு காரணம் என்ன?

வானவியல் என்பது விண்வெளி பொருட்களை கொண்டு ஆய்வு செய்யும் ஓர் அறிவியல், ஜோதிடம் என்பது விண்வெளியில் இருக்கும் ஆற்றல் மண்டலங்களை பற்றி ஆய்வு செய்யும் ஓர் மெய்ஞ்ஞானம்.

நட்சத்திர மண்டலங்கள் மூலம் வெளிப்படும் ஆற்றல் ஆனது பூமிக்கு எந்த பகுதியிலிருந்து பிரதிபலிக்கபடுகிறதோ அந்த பகுதியை கணக்கில் கொண்டு ஆய்வு செய்வது ஜோதிடம். பூமி நாம் இருக்கும் இடம் ஆகையால் இங்கு வந்தடையும் ஆற்றலை தான் நாம் கணக்கிடுவோம், மாறாக பூமியை இதில் இணைக்க முடியாது.

ராகு கேது என்பது என்ன?

விண்ணில் எந்த புள்ளியில் நட்சத்திர ஆற்றல் பிரதிபலிக்கப்படுகிறதோ அப்புள்ளி நமக்கு மிகவும் முக்கியமானது. பூமியின் வட்டபாதையும், சந்திரனின் வட்டப்பாதையும் இணையும் இடத்தில் விண்கற்களோ, விண் தூசுக்களோ இல்லாமல் வெற்றிடமாக வெறுமையாக இருக்கும். இந்த புள்ளியில் ஆற்றல் அதிக அளவில் கடத்தப்படும். ( வெற்றிடத்தில் ஆற்றல் பரவும் என்பது விஞ்ஞான தத்துவமும் கூட)

ராகு-கேது புள்ளிகளில் பூமியின் நிழல் படிவதால் அதை சாயா கிரகம் ( நிழல் கிரகம்) எனவும் அழைக்கிறார்கள்.




ஜோதிட ரீதியான கிரகங்கள் எனும் பட்டியலை பார்த்தீர்களா? அதன் வரிசையை ஞாபகம் வைக்க எளிய வழி உண்டு. ஞாயிறு முதல் சனி கிழமை வரை மனதில் வரிசையாக சொல்லி அத்துடன் ராகு / கேதுவை இணைத்து கொண்டால் போதுமானது.

உலகின் அனைத்து காலண்டரிலும் கிழமை ஒன்றாக இருப்பதன் காரணம் புரிகிறதா?

கிரகத்தை பற்றி புரிந்து கொண்டோம். ராசி மண்டலத்தை பற்றி அடுத்த வகுப்பில் விளக்குகிறேன்.

கடந்த பத்துவருடங்களாக ஆயிரத்துக்கும் மேம்பட்ட மாணவர்களுக்கு ஜோதிடம் கற்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பத்து வருடங்களுக்கு மேலாக ஜோதிடத்தின் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டிய அனுபவம். சில ஜோதிட புத்தகங்களும், மாத பத்திரிகை மூலம் மக்களிடம் கருத்தாடிய அனுபவம் எங்களை ஜோதிடம் கற்றுக்கொடுக்கும் நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.

வீடியோ மூலம் வெளிநாடுகளில் வாழும் மாணவர்களுக்கு கற்று கொடுத்து அவர்களுக்கு நேரடியாக கற்றுகொண்ட அனுபவத்தை அளித்துள்ளோம். பலதரப்பட்ட ஆய்வுகள் மேற்கொண்டு விவசாயம், பங்குசந்தை, ஆன்மீகம், வாழ்வியல் என அனைத்து துறையிலும் ஜோதிடத்தை பயன்படுத்திய அனுபவம் உண்டு.

12 comments:

  1. 450 பக்கங்களை கொண்ட தமிழ் ஜோதிட புத்தகம் இலவசமாக பெற்றுக்கொள்ள mahendrakumaar@gmail.com ஈமெயில் இல் தொடர்பு கொள்ளவும்

    வாட்ஸ்அப் : +968 93141272
    +91 9524352616

    ReplyDelete
  2. Kindly send Natchra palan and Jothida book

    ReplyDelete
  3. ஐயா ஜோதிடம் பற்றிய ஆய்வு ஒவ்வொரு ராசி நட்ஷத்திரம் கிரஹம் பாகை நேரம் தன்மை பஞ்சபூதம் ........விளக்கங்கள் மிக சுலபமாக படிக்கவும் புரிந்து கொள்ளவும் முடிந்ததது சந்தேகங்கள் பூர்த்தியாகி விட்டது நன்றி.......எனக்கு இதனை Pdf File இருந்தால் மின்அஞ்சலுக்கு அனுப்புமாறு கணிவுடன் கேட்டுகொள்கிறேன் நன்றி...

    ReplyDelete
  4. Dear sir,

    Your explantion really superb.
    I read my astro books but none can explains like this.
    I want to join your class
    Kindly let me know the procedure for it.
    My mail id c.rajeshb@yahoomail.com

    ReplyDelete
  5. ஜோதிடம் பற்றிய தகவல் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  6. மிகவும் அருமையான விளக்கங்களுக்கு நன்றி ஐயா இந்த புத்தகம் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    ReplyDelete
  7. ssr1012@gmail.com ஜோதிட புத்தகம் இருந்தால் எனக்கும் பகிரவும்

    ReplyDelete
  8. நட்சத்திர பாகை 30 டிகிரி என்றால், ஒவ்வொறு வருடமும் நேர அளவு சமமாக தானே இருக்க வேண்டும். ஆனால் இல்லையே ஏன்? எ.கா. ஒரு வருடம் அஸ்வினி 26மணி 10 நிமிடம் இருந்தால், அடுத்த வருடம் அஸ்வினி 26மணி 35 நிமிடம் உள்ளது, அதற்கு அடுத்த வருடம் அஸ்வினி 26மணி 2 நிமிடம் உள்ளது ஏன் இந்த வேறுபாடு.

    ReplyDelete
  9. அய்யா வணக்கம்
    தங்களின் ஜோதிட பாடம் மிக அருமை மற்றும் எளிமை.எவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கங்கள்.இது போன்ற பாடத்தை வேறு எந்த இணைய தளத்தில்காணவில்லை.நன்றி.

    ReplyDelete
  10. Super sir please send me your book

    ReplyDelete
  11. Are you still in this Blog sir

    ReplyDelete
  12. Dear Sir,Very useful Blog.Hope you fine and well

    ReplyDelete